Home » காதல் » வெகுளியாய் சிரிக்க வேண்டும்…

வெகுளியாய் சிரிக்க வேண்டும்…

புல்லாங்குழலின் வட்டம், தாவணி போட்ட தீபாவளி போன்ற அற்புதமான பாடல்களை எழுதியவர் திரைப்பட பாடலாசிரியர் யுகபாரதி. சமீபத்தில்தான் இவரது திருமணம். தனது வாழ்க்கை துணைவிக்கு இவர் எழுதிய கவிதை, திருமண அழைப்பிதழில் அச்சிடப்பட்டுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் ரசித்த அவரது கவிதை இங்கே-

தேவதை தேவையில்லை
தெளிந்த நல் வதனம் போதும்
வைர நகையெதற்கு?
வழித்துணையாதல் இன்பம்
படிக்கிற பழக்கமுண்டு
அடிக்கடி திட்டமாட்டேன்
பாதியாய் இருக்க வேண்டாம்
முழுவதும் நீயே ஆகு
இம்சைகள் இருக்கும் கொஞ்சம்
இனிமைதான் ஏற்றுக் கொள்க
வாழ்வதற்கு கைவசம் கவிதைகள்
வாய்க்கப் பெற்றேன்
காதலில் விழுந்தேனில்லை
எனவே, பிறக்கிற பிள்ளைக்கான
பெயரையும் நீயே இடலாம்
சந்தேகம் துளியும் இல்லை.
அந்தரங்கம் உனக்கும் உண்டு
சமயத்தில் நிலவு என்பேன்
சமையலில் உதவி செய்வேன். எழுதிடும்
பாட்டுக்குள்ளே எங்கேனும் உன்னை வைப்பேன்
ஒரே ஒரு கோரிக்கைதான் உன்னிடம் வைப்பதற்கு
வேலைக்கு கிளம்பும்போது
அழுவதை தவிர்க்க வேண்டும்
வெறுங்கையோடு திரும்பி வந்தால்
வெகுளியாய் சிரிக்க வேண்டும்…

Leave a Reply