Home » கொறிக்க... » வாழ்க நலமுடன் » ஐம்பதிலும் அழகாய் இருக்க… சில டிப்ஸ்…

ஐம்பதிலும் அழகாய் இருக்க… சில டிப்ஸ்…

வாரம் தோறும் வயதாகிறது…. இது அறந்தை நாராணன் எழுதிய நாவல்… உண்மையிலும் இது நிஜம்தானே? ஆனால் நமக்கு வயதானாலும் ஒன்றும் தப்பில்லை… மனசும் நம்முடைய தினசரி செயல்பாடுகளும் சரியாக இருந்தால் ஐம்பதென்ன… எண்பதானாலும் இளமையான தோற்றத்துடன் வாழமுடியும்.

இதோ அதற்கான சில டிப்ஸ்கள்

இப்போதெல்லாம் முப்பது வயதிலேயே நரைக்கத் துவங்கிவிடுகிறது நரைமுடிதான் முதுமையின் அடையாளத் தோற்றம் என்பதால் டை உபயோகியுங்கள்… கறுப்பு நிற உங்கள் தலைமுடியையும் மீசையையும் நீங்கள் கண்ணாடியில் பார்க்கிற போது உங்களுக்கும் உற்சாகம் பிறக்கும். டை உபயோகப்படுத்த துவங்கியதும் தவறாமல் உபயோகப்படுத்துங்கள். அதிலும் கெமிக்கல் முறையில் தயாரிக்கும் டையை உபயோகப்படுத்தினால் தோல்வியாதி, அலர்ஜி, முடிகொட்டுதல் போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம் டை உபயோகிப்பதில் உங்களுக்கு விருப்பமில்லை என்றால் பூவரசங்காய் முக்கால் பங்கும், கரிசலாங்கண்ணி கால் பங்கும் எடுத்து பக்குவமாக அரைத்து தலையில் பூசிக்கொள்ளுங்கள் முடி நல்ல பொலிவோடு அழகாக இருக்கும்.

அடுத்து கண்களுக்கு அதிக சிரமம் தரும் வேலைகளை தவிர்க்கவேண்டும். அதிக நேரம் டி.வி. பார்ப்பது, அதிகம் நேரம் புத்தகம் படிப்பது போன்ற பழக்கங்களை குறைத்துக் கொள்ளுங்கள் முதுமையில் கண்களுக்கு கீழே கருவளையம் வரும் அது உங்கள் வயதைக்கூட்டி முதியவராக தோற்றமளிக்கச் செய்யும். எனவே அந்த கருவலையத்தை தவிர்க்கும் விதமாக ஆரஞ்சுப்பழச் சாற்றை கண்ணுக்குக் கீழே தேய்த்து சற்று நேரம் கழித்து இதமான வெந்நீரில் கழுவிவிடுங்கள் பிறகு அந்த இடத்தில் வெள்ளரிப் பிஞ்சை தேயுங்கள். மெல்ல மெல்ல கருவளையம் காணாமல் போய்விடும்.

அடுத்து முதுமையில் நீர்சத்து குறைபாடு என்பது உடலில் ஏற்படும். இதனால் பலருக்கு நா வறட்சி, உதடு கறுத்துப் போதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். இதற்கு எலுமிச்சை பழத்தைத் தேய்த்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் ஆவி பிடியுங்கள். நா வறட்சியை தவிர்க்க அடிக்கடி வெந்நீர் குடியுங்கள். குறைந்தது ஒரு நாளைக்கு ஐந்து லிட்டர் தண்ணீராவது குடிக்க பழகுங்கள்.

அடுத்து கால்வெடிப்புகள் உங்கள் முதுமை தோற்றத்தை மேலும் அதிகப்படுத்தும் என்பதால் இதமான சுடுநீரில் பாதத்தை நனைய விட்டு நன்கு கழுவுங்கள் பிறகு வெடிப்பு உள்ள இடத்தில் மஞ்சள் பற்றை போடுங்கள் அல்லது கற்றாழை கொண்டு வந்து அதனுடைய சாறை கால்வெடிப்புகளில் தடவி சிறிது நேரம் ஊறவிடுங்கள். இதனால் பித்த வெடிப்பு கால் ஆணி ஆகியவை குணமாகிவிடும்.

அடுத்து முதுமையில் கன்னங்களில் குழி விழுவது இயற்கைதான் ஆனால் இதையும் நம்மால் தடுத்துவிடமுடியும். தினமும் காலையிலும், மாலையிலும் இதமான சூடுள்ள வெந்நீரைகுடித்து அதை இரண்டு கன்னப்பகுதியிலும் ஒதுக்கி உப்ப வைக்க வேண்டும். சிறிது நிமிடம் இப்படியே வைத்திருந்து பிறகு கொப்பளியுங்கள். பிறகு கன்னங்களின் உட்புறத்தில் விரலால் மசாஜ் செய்யவேண்டும். இப்படி சில வாரங்கள் செய்தாலே போதும் கன்னங்களில் குழி மறைந்து இளமைத் தோற்றம் கிடைக்கும்.

கழுத்து சுருக்கம் என்பதும் உங்களின் வயதை கூட்டும் அதனை அகற்ற சொர சொரப்பாக அரைக்கப்பட்ட அரிசி மாவையும், கடலை மாவையும் கழுத்துப்பகுதியில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பிறகு நீரில் கழுவுங்கள்.

அடுத்து உடல் ஆரோக்கியமாக இருந்தாலே இளமையாக உணர்வுகளும் மனநிலையும் உங்களுக்குள் இருக்கும்.

அந்த உடல் ஆரோக்கியம் வேண்டுமானால்.. விடியற்காலையில் வெறும் வயிற்றில் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டு குறைந்த பட்சம் நான்கு கிலோ மீட்டர் தூரமாவது நடைபயிற்சி செய்யுங்கள்.

நடைபயிற்சியால் உடலிலுள்ள உறுப்புகள் உற்சாகம் பெறும் நரம்பு மண்டலம் நீரடையும், வயிற்று பிரச்னைகள் தீரும். இரத்தக்கொதிப்பு, நீரழிவு கட்டுப்படும்.

அடுத்து உங்கள் மனநிலையில் வயதானவர் என்கிற எண்ணத்தை தூக்கி எறிந்துவிட்டு நாம் இளைஞன். நம்மால் எதையும் செய்ய முடியும் நம் உடல் மிகமிக உற்சாகமாக இயங்குகிறது. நூறு சதவிகிதம் இளமையாக இருக்கிறது. ஆரோக்யமாக இருக்கிறது என்றே எண்ணுங்கள்…’’ கண்டிப்பாக உங்கள் தோற்றத்தில் நீங்கள் இளைஞராக மாறிவிடுவீர்கள். அடுத்து இயற்கை அழகை நேசியுங்கள். புதுப்புது விஷயங்களை ரசியுங்கள்.

காதல் உணர்வு உங்களை இளமையாக வைத்திருக்கும் என்பதால் மனைவியை காதலியுங்கள். உங்கள் மனைவியின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் ரசியுங்கள், கொலுசு சத்தம், சிரிப்பு, உடையணியும் பாங்கு என எல்லாவற்றையும் ரசியுங்கள் கூடவே பாராட்டுங்கள்.

வாரத்திற்கு ஒரு முறையாவது கோயில்கள், சுற்றுலா தலங்கள் என குடும்பத்துடன் சென்று வாருங்கள். அந்த மனநிலை உங்களுக்குள் இருக்கும் இறுக்கத்தை துரத்தி மனதை உற்சாகப்படுத்தும்.

மனைவியுடன் தனிமையில் மனம்விட்டு நிறைய விஷயங்கள் பேசுங்கள். ஒருவருக்கு ஒருவர் தங்களுக்குள்ள தவறுகளை சுட்டிக் காட்டி தெளிவு நிலைபெறுங்கள். அது உங்களுக்குள் இருக்கும் காம்ப்ளக்ஸை விலக்கி புத்துணர்ச்சியை தரும்.

உடல் உறவு என்பது மனதையும், உடலையும் உற்சாகமாக வைத்திருக்கும் என்பதால் வாரத்திற்கு நான்கு முறையாவது மனைவியுடன் உடல்உறவு வைத்துக் கொள்ளுங்கள்.

யோகாசனம், மெடிடேஷன் போன்றவற்றை உங்கள் வாழ்நாளில் ஒரு அங்கமாக கடைபிடியுங்கள்.

இதெல்லாம் நீங்கள் மேற்கொண்டாலே ஐம்பதிலும் இருபது வயது இளைஞனாக தோற்றமளிப்பீர்கள்.

_குருஜி-

Leave a Reply