Home » கொறிக்க... » 30 நாளில் சாமியார் ஆவது எப்படி?

30 நாளில் சாமியார் ஆவது எப்படி?

guru1. கதை கட்டும் திறமை

இது தான் அடிப்படை. நீங்க பிறக்கும் போதே யானை பிளிறுச்சு, பாம்பு வந்து கும்பிட்டுச்சு. 5 வயசுல அதை பேசினேன். 10 வயசுல இதை பேசினேன். இப்படி ரீல் ரீலா சுத்தனும். உங்களால முடியாட்டி ஆள் வச்சு கூட எழுதலாம். முடிஞ்சா நான் இந்த பாபாவேட அடுத்த அவதாரம், இந்த யுகத்தில் இவரோட அவதாரம் ன்னு கதை வுட முடிஞ்சா எடுத்த உடனேயே கூட்டம் எகிறும்.

2. முக்தி/ஞானம் வந்த கதை

இது அடுத்த திறமை. இந்த பாபா வந்து எனக்கு தீட்சை குடுத்தார். இந்த கடவுளே நேர்ல வந்து காவியுடை குடுத்தார் ன்னு ரெடி பண்ணி வச்சுக்கோங்க. வயசு கொஞ்சம் அதிகமா இருந்து எனக்கு இப்போ 200 வயசு ஆகுது, வேற கிரகத்துல இருந்து நேரா இங்க தான் வர்றேன்னு சொன்னா காசு கொட்டோ கொட்டு ன்னு கொட்டும்

3. பேசுதல்,ஆடுதல் பாடுதல்

இனிமையாக பேசுதல்/எழுதுதல், நல்லா நடனம் ஆடுதல், நல்லா பாடுதல் என ஏதாவது ஒன்னு கையில் இருப்பது கூடுதல் திறமை. இந்த நடனம் ஆடறதுலையும் பெண்களோட சேர்ந்து ஆட தெரிந்து வச்சிருக்கறது ரொம்ப முக்கியம்.

4. மேஜிக்
வாயில் இருந்து லிங்கம் எடுத்தல் ல்ல ஆரம்பிச்சு சங்கிலி தர்றது, லேகியம் தர்றது, மருந்து தர்றது இதெல்லாம் கைவசம் இருக்கனும். நல்ல மேஜிசியன் வச்சு கத்துக்கறது நல்லது. பின்னாடி மாட்டிக்காம இருக்க உதவும். கொடுக்கற மருந்து நோய குணப்படுத்துதோ இல்லையோ மான்கறி வைத்தியர் மாதிரி நாலு பேர செட் பண்ணி வீடியோ எடுத்து விளம்பரம் பண்ணிக்கனும். இந்த வித்தைகளை முன்னாடி செஞ்ச ஆளுங்ககிட்ட இருந்து பாத்து காப்பி அடிச்சாக்கூட யாரும் கேக்க மாட்டாங்க.

5. பேர் வைத்தல்

முதல்ல உங்களுக்கு ஒரு நல்ல பேரா பாத்து வச்சுக்கோங்க. அதுவும் ஆனந்தா, சரஸ்வதி, பாபா இதுல முடியற மாதிரி இருக்கனும். அதே மாதிரி சீடர்களுக்கும் பேர் வைக்கும் முறை இருக்கனும். சக்தி முத்திரை, சுத்த பரிமள தீட்சை ன்னு சம்ஸ்கிருத்துல தான் நீங்க குடுக்கும் பயிற்ச்சிக்கும் பேர் இருக்கனும். தப்பிதவறி தமிழ்ல பேர் வச்சீங்க உடனே நீங்க போலிச்சாமியாருன்னு கண்டுபிடிச்சிடுவாங்க.

6. நிறுவனம்

எடுத்தவுடனே பள்ளிக்கூடம், மருத்துவமனை, அன்னதானம் ன்னு திட்டம் போட்றனும். அப்புறம் எத்தினி ஏக்கர்ல ஆசிரமம் கட்டினாலும் யாரும் கேக்க மாட்டாங்க. கூடவே அரசியல் கட்சிகளையும் காவல் துறையையும் கவனிச்சுடுறது நல்லது. முடிஞ்சா அதிலிருந்தும் சீடர்கள் வச்சுக்கறது பின்னாடி உதவும். ஒரு அடியாள் படை வச்சுக்கிட்டா தொந்தரவு குடுக்கறவங்களை போட்டுத்தள்ள வசதியா இருக்கும்.

7. பணம் பண்ணும் திறமை

இதுதான் இருக்கறதுலியே முக்கியமானது. கால் கழுவி விட ஐயாயிரம், தலை சீவி விட பத்தாயிரம், வாயில் இருந்து எடுத்த லிங்கத்துக்கு ஒரு லட்சம் ன்னு வச்சா கோடி கோடியா கொட்டும். அங்கங்க ஆசிரமம் கட்டி லோக்கல் ஆள் வச்சுட்டீங்கன்னா போதும். கொஞ்ச நாள்ள நீங்க பில்லியனர்.

8. பொய் பேசும் கலை

இந்த கலை நிறைய இடங்களில் உதவும். அதுவும் பொய்யை உண்மை மாதிரி பேசுறது, பொய்யை உண்மையாக்குறது ன்னு தெரிஞ்சு வச்சுருந்தா நிறைய உதவும். இதெல்லாம் தெரியலைன்னா நல்ல அரசியல்வாதிய கூட்டு சேர்த்துக்கலாம். இல்லாட்டி நல்ல வக்கீலா பார்த்து பயிற்சி எடுத்துக்கறது நல்லது (வக்கீல் நண்பர்கள் மன்னிக்க). வக்கீல வச்சுக்கறது பின்னாடி ஜாமீன் எடுக்க உதவும்.

9. சொற்பொழிவு ஆற்றும் கலை

இது பேச்சு திறனோட சேர்ந்தது தானாலும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கு. விவேகானந்தர், ரமணர், ஓஷோ, ஜேகே இப்படி எல்லாரோடதிலையும் இருந்து கொஞ்சம் எடுத்து கலக்கி அடிக்கனும். தப்பிதவறி யாராவது கேட்டா நான் சொன்னத தான் அவரும் சொல்லியிருகாருன்னு சொல்லிடலாம். இந்த கலைக்கு வேணுமின்னா தமிழ் சினிமா டைரக்டர்கள் கிட்ட பயிற்சி எடுத்துக்கலாம். ஏதாவது தெரியல்லைன்னா மவுனமா இருந்துட்டு இதுக்கு இதுதான் பதில்ன்னு சொன்னா கூட்டம் அலை மோதும். இது முடியாட்டி மவுன சாமியார் என சொல்லிக்கோங்க. பிரச்சினையே வராது. என்ன யாரும் நீங்க பேசுறத யாரும் பாத்திட கூடாது.

10. முடிவளர்க்கும்/வெட்டும் கலை

தலைமுடி, தாடி, மீசை இப்படி ஏதாவது ஒன்னையோ இல்லாட்டி எல்லாத்தையுமோ வளர்த்திக்கிட்டோ இல்லாட்டி மொட்டை அடிச்சுகிட்டோ இருக்கனும். இதிலேயும் தலைமுடி பாதங்களை தொடரமாதிரி, புசுபுசு ன்னு இருக்கற மாதிரி என கொஞ்சம் வித்தியாசமா இருந்தா நல்லது. நரைச்சு இருந்தா வயசாயிடுச்சின்னு எல்லோரும் நம்பிடுவாங்க. தலை முடில்ல இருந்து எண்ணை அல்லது தாடியில் இருந்து மோதிரம் ன்னு எடுத்தா சீக்கிரமா காசு பாத்திடலாம்

11. போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் கலை

இது கொஞ்சம் யோசிச்சு செய்யவேண்டிய வேலை. கையை தூக்கி ஆசீர்வாதம் பண்றமாதிரியான போஸ்கள் எல்லாம் ஓல்டு பேஷன். ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட்ல்ல போஸ் குடுக்கலாம். முப்பத்திரண்டு பல் தெரியறமாதிரி, டான்ஸ் ஆடுறமாதிரி போஸ் குடுத்து விளம்பரம் பண்ணினா கூட்டம் பிச்சுகிட்டு போகும். ஏதாவது போதை மருந்து போட்டுகிட்டு 24 மணி நேரம் தியானம் பண்ற மாதிரி போட்டோ போட்டா நீங்க எங்கியோ போயிடுவீங்க.

12. போட்டோவை வைத்து கதை பண்ணும் கலை
இத பத்தி நிறைய பேருக்கு தெரியாது. அதுனால நீங்க பூந்து கலக்கலாம். உங்க கண், காது, வாய், கை, கால் எல்லாத்தையும் வித விதமா போட்டோ எடுத்து கண் போட்டோவ வீட்டுல வச்சுகிட்டா கண் நல்லா தெரியும். கால் போட்டோவை வச்சுகிட்டா நானே அங்க இருக்கறமாதிரின்னு கதை கட்டி விடணும். இதுல இன்னொரு சவுகரியம். இந்த போட்டோவுல இருந்து பால் வந்திச்சு, தண்ணி வந்திச்சுன்னு புரளியை கிளப்பி விடறதுக்கும் உதவும். உங்க ஆசீர்வாதம் வாங்கின போட்டோ ன்னு சொல்லி வித்து காசு பாக்குறது உங்க திறமை.

13. அற்புதக்கதைகள் கட்டுதல்

பக்தர்களை வச்சு அவர்களுக்கு இந்த நோய் குணமாச்சு, அந்த பிரச்சினை குணமாச்சுன்னு பெயரோடையும் போட்டோவோடையும் விளம்பரம் பண்ணனும். முடிஞ்சா வீடியோ எடுத்து கூட விளம்பரம் பண்ணலாம். ஆளுங்கள செட்டப்பண்ணி நீங்க பேசுறப்பவே இதெல்லாம் நடந்திச்சுன்னு சீன் போட்டா கூட்டம் பிச்சுகிட்டு போகும். ஒருவேள இதுக்கு பயிற்சி எடுக்க வேண்டும்னா,கிருத்துவ பிரச்சார கூட்டதில் இந்த வித்தையை நேரிடையா பாத்து பயிற்சி எடுத்துக்கோங்க.

டிஸ்கி 1 : இதையெல்லாம் நீங்க செய்து மாட்டிக்கிட்டா நான் பொறுப்பில்லை

டிஸ்கி 2 : ஒருவேள நீங்க மாட்டிக்காம இருந்தா எனக்கு ராயல்டியா 10% தந்துடனும்.

Leave a Reply