இங்கிலாந்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள 4000 ஆண்டு பழைமை வாய்ந்த எகிப்திய சிலை ஒன்று தானாக நகர்ந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் அருங்காட்சியகத்திலுள்ள குறித்த சிலை இதுவரை 180 டிகிரி அளவுக்கு நகர்ந்துள்ளது. அதிர்வுகளால் இச்சிலை நகர்ந்திருக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. காரணம் அதிர்வினால் இவ்வாறு நகர்ந்திருந்தால் அதனருகிலுள்ள சிலைகளும் நகர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறில்லாம் இச்சிலை மாத்திரமே நகவர்வது அருங்காட்சியக நிருவாகிகளை குழப்பமடையச் செய்துள்ளது.
10 அங்குல உயரம்தான் கொண்ட இந்த சிலையை 80 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்து மம்மி ஒன்றிடமிருந்து கண்டுபிடித்து எடுத்துள்ளனர். பின்னர் இது மான்செஸ்டர் அருங்காட்சியகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
இந்த சிலையானது கடந்த சில வாரங்களில் மெதுவாக சுழன்றபடி நகர்ந்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முதலில் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் திடீரென சிலை இருந்த நிலையிலிருந்த வேறு பக்கம் திரும்பியபடி இருப்பதைப் பார்த்து அருங்காட்சியக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அப்போதுதான் சிலை நகர்ந்தமை தெரியவந்தது.
இந்த சிலையில் உள்ள நபரின் பெயர் நெப் சீனு என்பதாகும். இந்த சிலை இரவில் நகருவதில்லை. பகலில்தான் சுழன்று நகர்கிறது. இதுதான் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பாரோ மன்னர்கள் விடுத்த சாபம்தான் இந்த சிலையின் மர்மத்திற்கு காரணம் என்று ஒரு குழுவினர் கதையைக் கிளப்பியுள்ளனர்.
இதுகுறித்து அருங்காட்சியகத்தின் அதிகாரிகளில் ஒருவரான காம்பல் பிரைஸும் நம்புகிறார். அவர் கூறுகையில், இது சாபமாகக் கூட இருக்கலாம் என்றார்.
பிரைஸ் மேலும் கூறுகையில், என்னிடம் மட்டுமே சிலை வைக்கப்பட்டுள்ள பெட்டகத்தின் சாவி உள்ளது. இந்த நிலையில் சிலை எப்படி நகருகிறது என்பது ஆச்சரியமாக உள்ளது. யாரும் சிலையைத் தொடவே முடியாது. எனவே இதில் இறை மர்மமும் இருக்கலாம் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.